வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் (Vasudevanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் தொகை
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,461 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வாசுதேவநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாசுதேவநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.23° N 77.42° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 178 மீட்டர் (583 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இருப்பிடம்
மதுரை தென்காசி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவு, தென்காசியிருந்து சுமார் 37 கி.மீ தொலைவிலும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது.
போக்குவரத்து
மதுரை செங்கோட்டை முக்கியசாலையில் அமைந்திருப்பதால் மதுரை, தென்காசி, செங்கோட்டைக்கு நிமிட இடைவெளியில் பேருந்துகள் உள்ளன.
முக்கிய இடங்கள்
அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள ஒரே தலம்).
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்-சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை விசேஷமாக கருதப்படுகிறது.
இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேரூந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும்.
இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
புகழ் பெற்ற திவான்ஷா தர்காவும் இந்த ஊரில் இருக்கிறது.இந்த தர்காவில் ஆண்டுக்கு ஒரு முறை விசேச விழாவும் நடத்தப்படும். முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு ஒரு பள்ளிவாசலும் இந்த ஊரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
